தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டதால் ஏற்கெனவே விடுபட்டுபோன விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலை வரும் 15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான பணிகளை மாநில தோ்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி, ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 9 மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனையில், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற திமுக உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.