அமைச்சரின் மகனுக்கு துணை மேயர் பதவி?
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா போட்டியிடுகிறார். துணை மேயராகும் வாய்ப்பு கூட கிடைக்கும் என கூறப்படுகிறது.
திருவள்ளூர்,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே சமயத்தில் நடைபெறுகிறது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ஆவடி மாநராட்சி 4-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா போட்டியிடுகிறார்.
அமைச்சர் நாசர் திருவள்ளூர் மாவட்ட திமுக செயலாளராக இருப்பதால், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டும் வேட்பாளர்களை அவர் தான் தேர்வு செய்கிறார். இதானால், தனது மகனை வார்டு கவுன்சிலர் பதவிக்கு நிறுத்துவது குறித்து தலைமையிடம் முறையாக அனுமதி கோரி, அதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அமைச்சரின் மகன் ஆசிம் ராஜா வீடு வீடாக சென்று வாக்கு கேட்டு வருகிறார். மேலும் ஆவடி மாநகராட்சியில், திமுக அதிக இடங்களில் கைப்பற்றும் பட்சத்தில் அமைச்சரின் மகன் ஆசிம் ராஜா துணை மேயராகும் வாய்ப்பு கூட கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.