தினமலருக்கு கண்டனம் தெரிவித்த தினமலர்... காரணம் என்ன!!

தினமலருக்கு கண்டனம் தெரிவித்த தினமலர்... காரணம் என்ன!!

இன்றைய தினமலர் நாளிதழின் முதல் பக்கத்தில், சர்ச்சைக்குரிய செய்தி இடம்பெற்றதால், முதலமைச்சர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு விளக்கமளித்துள்ளது தினமலர் நாளிதழ்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் கனவு திட்டமான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பள்ளிக்கு காலையில் உணவருந்தாமல் வரும் மாணவர்கள், பசியால் வாடாமல், பாடத்தினை கவனிக்கின்றனர். 

இந்த திட்டம் பெற்றோர் மற்றும் மாணவர்களின் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில், தினமலர் நாளிதழில், மாணவர்களுக்கு பெரிதும் பலனளிக்கும் இந்த திட்டத்தினை கொச்சைப்படுத்தி ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அதாவது," மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு, ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது" என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த செய்திக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனால், தினமலர் நாளிதழ் மீது மக்கள் வெறுப்புகளை காண்பித்து வருகின்றனர். இதனிடையே, முதலமைச்சர் முக. ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில், "நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!" என கண்டனம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், இந்த செயலுக்கு கண்டனங்கள் மேலும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், தினமலர் நாளிதழின் ஆசிரியர் கி. ராமசுப்பு இதற்கு விளக்கமளித்து, அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், " கி.ராமசுப்பு ஆசிரியராக கொண்ட தினமலர் சென்னை,கோவை, மதுரை ,பாண்டிச்சேரி ,திருநெல்வேலி ,நாகர்கோவில் பதிப்புகளில் மேலே குறிப்பிட்ட செய்தி வெளிவரவில்லை. R. சத்தியமூர்த்தி ஆசிரியராக கொண்ட தினமலர் ஈரோடு, சேலம் பதிப்புகளில் இந்த செய்தி வெளியாகி உள்ளது. R. சத்தியமூர்த்தி கடந்த  23 வருடங்களாக இந்த இரண்டு பதிப்புகளையும் தனியாக நடத்தி வருகிறார். இருப்பினும்  "தினமலர்" பெயரில் இப்படி ஒரு அருவருக்கத்தக்க, வெட்கி தலை குனியக் கூடிய செய்தி வெளியாகி இருப்பது மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. தினமலர் ஈரோடு, சேலம் பதிப்புகளில் வெளியாகி உள்ள இந்த செய்தி  ஏற்புடையதல்ல  வன்மையாக கண்டிக்கிறோம்" என ஆசிரியர் கி. ராமசுப்பு இதற்கு விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிக்க || இரவு முழுவதும் கண் விழித்து வாகனம் ஒட்டினாலும், பயணம் முடிந்து ஓய்வெடுக்க இடமில்லை!!