”கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” எச்சரிக்கை விடுத்த இயக்குநர் கௌதமன்

”கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” எச்சரிக்கை விடுத்த இயக்குநர் கௌதமன்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் உண்மையான வரலாறு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் பாகத்தில் உண்மை இல்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என இயக்குனர் வ கௌதமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்புவை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த இயக்குனரும், தமிழ்ப்பேரரசு கட்சியின் தலைவருமான வ.கௌதமன் பின்வருமாறு பேசியுள்ளார்.

கோயம்பேடு சந்தை:

கீரை வியாபாரிகளுக்கு உரிய இடம் கோயம்பேடு சந்தையில் ஒத்துக்கப்படவில்லை எனவும்  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார் வ.கௌதமன்.  மேலும் இது தொடர்பாக தலைமை செயலாளரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளதாகவும் அதை அவர் சரிசெய்து தருவதாக கூறியுள்ளதாகவும் வ.கௌதமன் தெரிவித்துள்ளார். 

பொன்னியின் செல்வன் படம் குறித்து..: 

”தமிழ் நிலத்தை சோழ பேரரசு மட்டுமே 350 ஆண்டுகளாக ஆண்ட வரலாறு உண்டு.  இந்த திரைப்படத்தை தமிழனாக இருந்து சொல்லவில்லை என்றாலும் வரலாற்றை சொல்லி இருக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார் வ.கௌதமன்.

சோழர்களின் சின்னமான புலி  கொடியை ஒரு இடத்தில் கூட காட்டவில்லை என்றால் அப்படி என்ன வரலாற்று ஆய்வு செய்து உள்ளார்கள் எனக் கேள்வியெழுப்பிய அவர், மேலும் ஜெயமோகன் சோழர்களை தெலுங்கர்கள் என குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக் காட்டி படைப்பாளிகள் உண்மையை பேச வேண்டும் எனவும் ஆளுமையோடு படைப்பை உருவாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

எச்சரிக்கை..:

இது போன்ற வரலாற்றை மடைமாற்றும் செயல்கள் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றிருந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தமிழர்களை திரட்டி மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய கௌதமன், ஆதித்த கரிகாலன்  பிராமணர்களால் கொல்லப்பட்டான், ஆனால் பாண்டியர்களை குற்றம்சாட்டுவதை போன்று சித்தரிப்புகள் பொன்னியின் செல்வனில் உள்ளது இது வடதமிழகத்திற்கும் தென் தமிழகத்திற்கும் இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் நடவடிக்கை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சைவம் வைணவம் மட்டுமே தமிழர் சமயம் , இந்து மதம் என்கிற மதம் வெள்ளையர்கள் வருவதற்கு முன்பு இல்லை எனவும் புலிக் கொடியை மறைக்காவிட்டால் மத்திய அரசு தடுக்கும் என்பதற்காக மறைத்தார்களா ? எனவும் கூறியுள்ளார் வ.கௌதமன்.

பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்றை மடைமாற்றம் செய்துள்ளார்கள் புனைவுகளை தாண்டி உண்மைகளை சொல்லியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:  மீண்டும் ஒரு நேதாஜியா சசி தரூர்!!!கட்சியால் ஓரங்கட்டப்படும் காரணமென்ன!!!