அதிமுக மாநாட்டிற்கு தடைக் கோரிய மனு தள்ளுபடி!

அதிமுக மாநாட்டிற்கு தடைக் கோரிய மனு தள்ளுபடி!

அதிமுக மாநாட்டிற்கு தடைக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து அதிமுக சார்பில் "வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு" ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டுப்பணிகள் முழு மூச்சாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அம்மனுவில், மதுரை மாவட்டம் பெருங்குடி கருப்பசாமி கோயிலின் எதிர்புறத்தில் ஆக.20ல் அதிமுக சார்பில் மாநாடு நடக்கிறது. மாநாடு நடக்கவுள்ள இடம் மதுரை விமான நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. தினசரி அதிகளவில் விமானங்கள் வந்து செல்கின்றன. தரையிரங்கும் போது மிகவும் தாழ்வான பகுதியில் தான் விமானங்கள் பறக்கும் விமான நிலையத்தை சுற்றிய பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே உள்ளன.

 மத்திய தொழில்படை பாதுகாப்பு மற்றும் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது. சுமார் 15 லட்சம் பேர் மாநாட்டிற்கு வருவதாக அதிமுகவினர் கூறுகின்றனர். அன்றைய தினம் விமானங்கள் தரையிரங்குவதில் இடையூறு ஏற்படக் கூடும். மாநாட்டில் பங்கேற்போர் பட்டாசுகள் வெடிக்கும் போது வானில் உயரத்திற்கு பறந்து வெடிக்கும் போது அசம்பாவிதம் ஏற்பட்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பட்டாசுகள் வெடிக்க தடை விதித்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக விமான போக்குவரத்து துறையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தை சுற்றி 20 கி.மீ தொலைவிற்கு உரிய அனுமதியின்றி குறிப்பிட்ட அளவு உயரத்திற்கு மேல் விளம்பர பலகைகள் கூட வைக்க முடியாது. மாநாட்டிற்கு அனுமதி கோரும் முன் மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை. மாநாட்டிற்கு வருவோரால் பெருமளவு போக்குவரத்து இடையூறு ஏற்படும் எனவே ஆக 20ல் பெருங்குடியில் அதிமுக மாநாடு நடத்த தடை விதிக்க வேண்டும். மாநாடு நடத்த அனுமதிக்ககூடாது என சம்பந்தப்பட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு என்று நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர். பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நான்கு மாதத்திற்கு முன் மாநாட்டிற்கு அறிவிப்பு செய்து விட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் தடை கூறினால் எவ்வாறு முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், மாநாடு நிகழ்ச்சி முழுவதும் எவ்வித வெடிபொருட்களோ பட்டாசுகளோ வெடிக்க மாட்டோம் என அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயன் விஜயநாராயணன் உறுதி மொழி வழங்கினர். இதனையடுத்து மாநாட்டிற்கு தடைக்கோரிய மனுை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதையும் படிக்க:"சாதி ஒழிப்பை முன்னிறுத்தாமல் தமிழ் தேசியம் சாத்தியப்படாது" -திருமாவளவன்