விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் அரசு அனுமதி தரவேண்டும் என்றும், அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் கர்நாடகத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக சட்டப்பேரவையில் பா.ஜ.க.சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகளவில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும்படி, மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும்,
கேரளா மாநிலத்தில் ஓணம் மற்றும் பக்ரித் பண்டிகைக்கு அனுமதி அளித்ததால் தான் கொரோனா தொற்று அதிகரித்ததாகவும், தமிழ்நாட்டில் இன்னும் கொரோனா பாதிப்பு குறையவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு மட்டுமே அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும், இல்லங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து கொண்டாடலாம் என்றும்,இதை யாரும் தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் 12 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் வழங்கப்பட்டு வருவதாகவும்,
தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலையை தயாரிக்கும் 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கூடுதலாக 5 ஆயிரம் ஊக்கத்தொகை என மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.