"உச்சநீதிமன்ற தீர்ப்பே இறுதி தீர்ப்பு" அமைச்சர் துரைமுருகன்!!

உச்சநீதிமன்ற தீர்ப்பை இறுதி தீர்ப்பாக கர்நாடக அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்த போராட்டம் குறித்து சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் நீதித்துறை என்ன சொல்கிறதோ அதை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். 

மேலும், அனைவரும் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தொடங்கினால் உச்ச நீதிமன்றத்தின் தனித் தன்மை அதிகாரம் கேள்விக்குறியாகும் என்பதை உணரவேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தினார்.

மேலும் பேசிய அவர், 15 நாட்களுக்கு 5,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவின் படி,  கர்நாடகம் தண்ணீர் வழங்கி வருவதாக கூறியதுடன், இன்று காலை நிலவரப்படி ஏழாயிரம் கனஅடி நீர் வந்துள்ளதாகவும், நாளையுடன் 15 நாள் கெடு முடிவடையவுள்ள நிலையில் நமக்கு வரவேண்டிய பதினோராயிரம் கனஅடி நீர் வந்துவிடும் என்று எதிர்பார்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || டிடிஎப் வாசனின் ஜாமீன் மனு... இரண்டாவது முறையாக தள்ளுபடி!!