ஈபிஎஸ்-யை மறுக்கும் தேர்தல் ஆணையம்...உடனே நீதிமன்றம் சென்ற எடப்பாடி...உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!

ஈபிஎஸ்-யை மறுக்கும் தேர்தல் ஆணையம்...உடனே நீதிமன்றம் சென்ற எடப்பாடி...உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழு வழக்கில் இரட்டை இலைசின்னம் தொடர்பாக ஈபிஎஸ்-ன் இடையீட்டு மனு குறித்து தேர்தல் ஆணையம் 3 நாட்களில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை நடைபெறவுள்ளதால், தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடிபிடித்துள்ளது. ஆளும் கட்சி தரப்பில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடும் நிலையில், அதிமுக தரப்பில் ஈபிஎஸ் தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லை. 

இதற்கிடையில், ஈரோடு (கி) இடைத்தேர்தலில் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி அளிக்கும் வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதால், அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக்கோரி ஈபிஎஸ் தரப்பில் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதால், இவ்வழக்கில் பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் ஈரோடு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய ஏதுவாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை, தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் ஈபிஎஸ் செய்த இடைக்கால உத்தரவு வழங்கக்கோரிய மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக 3 நாட்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு பிப்ரவரி 3ம் தேதிக்கு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். தொடர்ந்து, தேர்தலை கருத்தில் கொண்டு இடைக்கால உத்தரவுக்காக மட்டுமே இம்மனு விசாரிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com