2020-2021ம் ஆண்டுக்கான குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா, சென்னை பசுமைவழி சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு, வெற்றிப்பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளியான ரஞ்சித் என்பவருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழகம் சமூகநீதியை முன்னிறுத்தும் மாநிலம் என குறிப்பிட்டார். வசதி படைத்தவர்கள் மட்டும் எழுதும் ஐஏஎஸ் தேர்வை, அடித்தளத்தில் உள்ளவர்களும் எழுத வேண்டும் என்பதற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2000ம் ஆண்டு ‘அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தை’ ஏற்படுத்தியதாகவும், தற்போது இந்த மையம் பல்வேறு மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாகவும் ஸ்டாலின் கூறினார்.இந்திய அளவில் உயர் பதவியில் இருக்கும் போது பிறந்த மண், மொழியை மறந்துவிடக்கூடாது என குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.