நீதிமன்ற அவமதிப்பு செயல்...சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை...

நீதிமன்ற அவமதிப்பு செயல்...சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை...

அரசு பணி நியமனங்களின் போது தேர்வு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் அதனை மீறுவது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் எச்சரித்துள்ளது.

அரசுப்பணி நியமனம் முறைக்கேடு  :

புதுவை பொதுப்பணித்துறையில் 10 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக, முறையற்ற பணியமர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக  கூறி,  பட்டதாரி இளைஞர் அய்யாசாமி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புதுவை  பொதுப்பணி துறையில்  எத்தனை பேர் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை தாக்கல் செய்ய  அம்மாநில பொதுப்பணித்துறை செயலாளருக்கு  உத்தரவிட்டிருந்தது.இதன்படி, 2016ம் ஆண்டு முதல் இதுவரையில் எந்த நியமனங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும்,அரசுப் பணி நியமனங்கள் முழுக்க முழுக்க விதிகளை பின்பற்றியே மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்து புதுச்சேரி அரசுத்தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

வழக்கு விசாரணை :

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், அரசு பணியில் எந்த  சூழ்நிலையிலும் முறைக்கேட்டை அனுமதிக்க முடியாது எனவும் அரசியல் சட்ட விதிகளை  பின்பற்றியே அனைத்து நியமனங்களும் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.தற்காலிக நியமனங்களிலும் அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்து, விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, இதில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் அதற்கு அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என கூறியுள்ளார். 

நீதிமன்ற அவமதிப்பு செயல் :

பணி நியமனங்கள் தொடர்பாக புதுச்சேரி அரசின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், அனைத்து நியமனங்களும் போட்டித்தேர்வு அல்லது வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமே மேற்கொள்ள வேண்டும் எனவும், தேர்வு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.தேர்வு நடைமுறைகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லையென்றால் அது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் எச்சரித்துள்ளார்.