செம்பரம்பாக்கம் ஏரி: உபரி நீர் திறப்பு 6000 கன அடியாக அதிகரிப்பு!

தொடர் மழை மற்றும் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதையும் படிக்க : தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பை கருதி நேற்று 2 ஆயிரத்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், 19 கண் மதகின் வழியாக 2 ஆயிரத்து 500 கன அடியும், ஐந்து கண் மதகின் வழியாக 3500 கன அடி நீர் என மொத்தம் 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.