வால்பாறையில் தேயிலை தோட்டங்களில் வெள்ள நீர்

தென் மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருவதைத் தொடர்ந்து, வால்பாறையில் தேயிலைத் தோட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.
வால்பாறையில் தேயிலை தோட்டங்களில் வெள்ள நீர்

தென் மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருவதைத் தொடர்ந்து, வால்பாறையில் தேயிலைத் தோட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையாறு அணை 163 அடி உயரத்தைத் தாண்டியது. வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென் மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, சோலையார் அணை நீர்ப்பிடிப்புப் பகுதியான சின்னக்கல்லார் மற்றும் நீரார் அணை பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் அனைத்தும் கூழாங்கல் ஆற்றின் வழியாக சோலையார் அணைக்குச் செல்கிறது.

கூழாங்கல் ஆற்றில் இன்று காலை 6 மணி நிலவரப்படி 6,000 கனஅடி நீர் சோலையார் அணைக்குச் சென்று கொண்டுள்ளது. 165 அடி உயரமுள்ள சோலையார் அணையில் தற்பொழுது 163 அடி நீர் உள்ளது. சேடல் வழியாக 5,000 கன அடி நீர் வெளியேறி வருகிறது. 790 கனஅடி நீர் மின் உற்பத்திக்காக செல்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி சட்டர் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதன் காரணமாக உருளிக்கல் பகுதியிலுள்ள தேயிலைத் தோட்ட பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தேயிலைத் தோட்டப்பணிகள் பாதிப்படைந்துள்ளன. பொதுப்பணித் துறையினர் அணையை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com