முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் மூச்சுத்திணறல் காரணமாக காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் மூச்சுத் திணறல் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காலமானார்.

முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் மூச்சுத்திணறல் காரணமாக காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தொடக்கத்தில் தொழிற்சங்கவாதியாக வாழ்க்கையைத் தொடங்கிய நன்மாறன், பின்னர் சிபிஎம் கட்சியில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றினார் மிகக் கடினமான கருத்துக்களையும் மக்களுக்குப் புரியும் வகையில் எளிமையாகவும், நகைச்சுவையோடும் விளக்குவதில் வல்லவர். அதனாலேயே 'மேடைக் கலைவாணர்' என்ற அடைமொழியிட்டு அழைக்கப்பட்டார். இவர் தமிழில் முதுகலை பயின்றவர். 

கடந்த 2001 மற்றும் 2006-ஆம் ஆண்டுகளில் மதுரை கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரிடம் நன்மதிப்பைப் பெற்றவர்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்த வாய்ப்பை, மதுரை மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஐ.டி.பார்க், டைடல் பார்க் வரை மதுரைக்கு கொண்டு வரவும் பயன்படுத்திக் கொண்டவர்.

மதுரையில் உயர்நீதிமன்ற கிளை உருவாக தன் பங்களிப்பை செலுத்தி இருக்கிறார். இன்றும் வாடகை வீட்டில் குடியிருக்கும் கரை படியாத கைகளுக்கு சொந்தக்காரர். சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் இவருடைய அலுவலகம் சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாள்களிலும் திறந்தே இருக்கும்.

மதுரை ஆரப்பாளையத்தில் தனது மனைவி சண்முகவள்ளியோடு வசித்து வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்தமகன் குணசேகரன் நாகமலைப் புதுக்கோட்டையிலுள்ள பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்றுகிறார். இளையமகன் ராஜசேகரன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்காலிகப் பணியாளராகப் பணி செய்து வருகிறார். 

அண்மையில் தனக்கென்று குடியிருக்க சொந்த வீடு ஒன்றை ஒதுக்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நேரில் வந்து தனது மனைவியோடு மனு கொடுத்தார். இது மிக பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் உதவிகள் வந்ததைக்கூட மறுத்துவிட்டார்.

இந்நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று இரவு நன்மாறன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.