"As I am suffering from Valaigappu"... பி.டி.ஆரை மீண்டும் கலாய்த்த ஜெயகுமார்....
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை மீண்டும் கிண்டலடித்து பேட்டியளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 46-ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மரியாதை செலுத்தினார். அங்கு இருந்த காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயகுமார், ஊரக பகுதிகளில் தொழில் சாலைகள் அமைத்து தொழில் வளர்ந்தால் தமிழ்நாடு வளரும் என்று பல விஷயங்களை காமராஜர் முன்னெடுத்தார். தொழிற்சாலைகள் கட்டுவது, அணைகள் கட்டுவது கல்விக் கூடங்கள் கட்டுவது என அடிப்படையான விஷயங்கள் அவரின் சிந்தனையில் உதித்து தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசென்றார்.
திமுக கூட்டணியில் உள்ள தோழமை கட்சியின் கொடியை சில இடங்களில் ஏற்ற முடியவில்லை என்று சொல்கின்றனர். திருமாவளவன் போலீசாரை குறை சொல்கிறார் ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினை பற்றி பேசுவதில்லை. நண்பர் திருமாவளவனின் வீரம் எங்கே சென்றது என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த ஜெயகுமார், மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு பொறியல் கொடுக்க வேண்டும் என்று உள்ளது. ஆய்வின் போது ஏன் பொறியல் கொடுக்கவில்லை என்று அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் கேட்கவில்லை. தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்க குறிப்பில் கூட மதிய உணவில் மாணவர்களுக்கு பொறியியல் கொடுக்க வேண்டும் என உள்ளது.
ஜி.எஸ்.டி கூட்டத்தில் பங்கேற்க தனி விமானம் வேண்டும் என்றும் வளைகாப்பு நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜன் கூறினார் என்று எனக்கு தகவல் வந்தது. அதில் பங்கேற்காமல் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார்.
பள்ளி பருவத்தில் மாணவர்கள் விடுப்புக்கு கடிதம் கொடுப்பது போல், As I am Suffering from Valagappu..Kindly grant me permission " என்று அந்த கடிதத்தில் இருந்ததாக எனக்கு தகவல் வந்தது என தெரிவித்தார்.