அமமுகவும் சசிகலாவும் ஒன்றுதான்...!  முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி

சசிகலாவிடம் செல்போனில் தொடர்பு கொள்பவர்கள் எல்லாம் அமமுகவினர்தான். அமமுகவும், சசிகலாவும் ஒன்றுதான் என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.

அமமுகவும் சசிகலாவும் ஒன்றுதான்...!  முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் அதிமுக சார்பில் பேரூராட்சி கழக செயலாளர் சரவணன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி.சம்பத்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டு  தூய்மை பணியரளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி : அதிமுக கொரோனா தடுப்பு பணியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உதவி செய்யவில்லை என்று திமுகவினர் பேசி வருகின்றனர். ஆட்சிக்கு வந்த வேகத்தில் திமுகவினர் இப்போதுதான் ஆட்சிக்கு வந்துள்ளனர். அதனால் வந்த வேகத்தில் அவர்கள் இவ்வாறு பேசி வருகின்றனர்.  கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உயிரை பணயம் வைத்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டதால் அதிமுக ஆட்சியில் கொரோனா 10 ஆயிரத்தை தாண்டவில்லை. ஆனால் தற்போது கொரோனா தொற்றின் எண்ணிக்கை 40 ஆயிரம் வரை எட்டியது எனக்கூறினார்.
 
மேலும், சசிகலாவிடம் செல்போனில் தொடர்பு கொள்பவர்கள் அமமுகவை சேர்ந்தவர்கள். அமமுகவும் சசிகலாவும் ஒன்றுதான். அகில உலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் LKMB வாசு அமமுகவில் இருந்து தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்தார்.அதனால் மீண்டும் அதிமுகவில் சேர்த்தோம் வேதாளம் முருங்கை மரம் ஏறுவதை போல் மீண்டும் அந்த தவறை செய்துள்ளார். அவர் கட்சியில் நீக்கப்பட்டுள்ளார்.
 
காட்பாடி தொகுதியில் துரைமுருகன் வெற்றி செல்லாது என்று காட்பாடி தொகுதி வேட்பாளர் ராமு கொடுத்துள்ள புகாரில் எங்களுக்கும் உடன்பாடு உண்டு.
மாவட்ட தலைமையின் அறிவுரையின் பேரில் புகார் அளிக்கப்பட்டது என்று கூறினார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி. சம்பத்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.