ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி: உடற்கூறு ஆய்வுக்கு லஞ்சம் கேட்ட மருத்துவமனை ஊழியர்கள்...
உடற்கூறு ஆய்வு செய்து கொடுக்க லஞ்சம் கேட்பதாக கூறி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த தனியார்பள்ளி ஆசிரியர் சக்திவேல், அவருடைய மனைவி மற்றும் உறவினர்களின் குழந்தைகள் உள்ளிட்ட நான்கு பேர் நேற்று ஆற்றில் முழ்கி பரிதாபமாக பலியாகினர். இதனையடுத்து இறந்தவர்கள் உடல் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டது.
இதற்கிடையில் 4பேரின் உடல்களையும் உடற்கூறு ஆய்வு செய்து கொடுக்க மருத்துவமனை ஊழியர்கள் 12ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பணத்தை இறந்தவரின் தந்தை கொடுத்த நிலையில் மேலும் 10 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கேட்டு கட்டாயப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே உறவுகளை இழந்து தவிக்கும் நிலையில் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஒன்று திரண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.