இயல்பு நிலைக்கு திரும்புகிறது தமிழகம்... இனி எல்லா நாட்களிலும் கோவில்களுக்கு செல்லலாம்...

தமிழகத்தில் நர்சரி, அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் முழுமையாக இயங்க அனுமதி அளித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இயல்பு நிலைக்கு திரும்புகிறது தமிழகம்... இனி எல்லா நாட்களிலும் கோவில்களுக்கு செல்லலாம்...

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்படுகின்றன. அதேசமயம் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை. இந்த மூன்று நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.  அனைத்து நாட்களிலும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற 12 கோயில்கள் முன் பாஜகவினர் கடந்த வாரம் போராட்டம் நடத்தினர்.

மேலும், விஜயதசமி நாளான வெள்ளிக்கிழமை அன்று கோயில் திறக்கப்பட வேண்டும் என்று கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, முதலமைச்சர் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டன. 

இந்நிலையில், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என அனுமதி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்லவும்,  நர்சரி, அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள்  முழுமையாக இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள அனைத்து வகை கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  மேலும், திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகவுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் எனவும் முதலமைச்சர் மு.கக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.