கணவரை தொடர்ந்து, மகனும் பிரிந்து சென்றதால் விரக்தி.. தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை!!

சிவகாசியில் கணவரை தொடர்ந்து, மகனும் பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவரை தொடர்ந்து, மகனும் பிரிந்து சென்றதால் விரக்தி.. தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை!!

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமம் திருவள்ளுவர் நகரில் வசிக்கும் தம்பதியினர் வேலுச்சாமி( வயது 40) வனிதாராணி( வயது 36).. வேலுச்சாமி கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக மனைவியை பிரிந்து சென்று பொள்ளாச்சியில் உள்ள ஒரு உணவு விடுதியில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு லோகேஷ் ராஜ்( வயது15) என்ற மகனும், காவியா( வயது13) என மகளும் உள்ளனர். காவியா விசுவ நத்தத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். மகன் லோகேஷ்ராஜ் தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று குறைந்த மதிப்பெண் எடுத்ததால் பணம் செலவு செய்து கல்லூரி படிப்பு படிக்க வைக்க மாட்டேன் என தாயார் வனிதாராணி கூறியதாக தெரிகிறது.  

இதனையடுத்து லோகேஷ்ராஜ் தனது தந்தை வேலுச்சாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியதன் பேரில் வேலுச்சாமி பொள்ளாச்சியில் இருந்து சிவகாசிக்கு வந்து விசுவ நத்தத்தில் இருந்த தனது மகனை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சிக்கு சென்று விட்டார். 

இதனால் மனவிரக்தி அடைந்த வனிதாராணி தனது மகள் காவியா-வுடன் வீட்டினுள் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் தாய், மகள் உடல்களை கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தாய், மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.