விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழகமெங்கும் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரவாயலில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள சிலையில் முருகனும் விநாயகரும் செஸ் விளையாடுவது போன்றும் அதனை அவர்களது பெற்றோரான சிவன், பார்வதி பார்ப்பது போன்றும் வித்தியாசமாக விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வகையில், செஸ் விளையாட்டு போட்டியை ஊக்குவிக்கும் விதமாக விநாயகரும் முருகனும் செஸ் விளையாடுவது போன்ற சிலை வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்த்துவிட்டு புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.