"தமிழ்நாட்டின் முதல் விரோதியாக விளங்கும் ஆளுநரை வெளியேற்ற வேண்டும்" - வைகோ.

"தமிழ்நாட்டின் முதல் விரோதியாக விளங்கும் ஆளுநரை வெளியேற்ற வேண்டும்" - வைகோ.

தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திடும் நோக்கில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.  9 நாட்கள் பயணத்தை நிறைவு செய்து தமிழ்நாடு திரும்பிய முதலமைச்சர் முதலீடு குறித்து பல தலைவர்களையும் அதிகாரிகளையும்  சந்தித்து பேசியதாகவும் இந்த முதலீடுகள் மூலம் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் உறுதியளித்திருந்தார். 

இவ்வாறிருக்க, முதலமைச்சரின் இந்த பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்துள்ளார். 

உதகையில் நடைபெற்ற பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு பேசுகையில், முதலமைச்சரின் முதலீடுகள் குறித்த அரசு முறைப்பயணத்தை சுட்டி காட்டி,  வெளிநாடு சென்றால் மட்டும் முதலீட்டாளர்கள் வந்துவிட மாட்டார்கள் என்றும், உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை நாம் உருவாக்க வேண்டும் என்றும், தமிழகத்திலேயே எண்ணற்ற பட்டதாரி இளைஞர்களுக்கு வேலையில்லாத நிலை இருப்பதாகவும், அடிப்படை  கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும்  தமிழ்நாட்டில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார். 

இதையும் படிக்க       | வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது: ஆளுநர் விமர்சனம்!

இந்த நிலையில், ஆளுநரின் இந்த விமர்சனத்தைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 அதில்  அவர், உதகையில் நடைபெற்ற பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் முதலைமைச்சரின் பயணத்தை விமர்சித்து பேசிய ஆளுநர்  கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

" தமிழ்நாட்டின் முதல் விரோதியாக விளங்கும் ஆளுநரை வெளியேற்ற வேண்டும்;  இல்லையேல் நாகலாந்து மாநிலத்தில் மக்கள் விரட்டி அடித்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கும்” என்று கடுமையாக சாடியுள்ளார். 

மேலும், முதலமைச்சரின்  வெளிநாட்டுப் பயணத்தை இழிவுப்படுத்தி ஆளுநர் விஷத்தை கக்கி உள்ளதாகவும் தெரிவித்தார். ஆளுநரின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். 

இதையும் படிக்க       | ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி” - கரு.நாகராஜன் காட்டம்!