மருதுபாண்டியர்களின் குருபூஜை; 144 தடை உத்தரவு அறிவிப்பு!

மருதுபாண்டியர்களின் 222 வது குருபூஜையையொட்டி, சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், முழுவதும் மாமன்னர்கள், மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அதன்படி, வருகிற 24 ஆம் தேதி மாமன்னர்கள் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட திருப்பத்தூரில் 222 வது நினைவு தினம் அரசு சார்பிலும், 27 ஆம் தேதி அவர்களின் சமாதி அமைந்துள்ள காளையார்கோவிலில் குருபூஜை விழாவாகவும் அனுசரிக்கப்படுகிறது.  

இந்நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்த வரவுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் வருகிற 23 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார்.