இது என்ன மழைக்காலமா? மீண்டும் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!  

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது என்ன மழைக்காலமா? மீண்டும் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!   

உள் தமிழகம் முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், நாளையும் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், நாளை முதல் 12 -ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில்  மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.