சம்பள பாக்கியை வழங்கக் கோரி காவல் ஆய்வாளர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்காமல் கடமை தவறிய டி.ஜி.பி.யின் செயல், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது
தர்மபுரி மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய ரஞ்சித் என்பவர், 2019ம் ஆண்டு இரு மாதங்களுக்கு தனக்கு ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், அதனை வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும், டி.ஜி.பி.க்கு மனு அனுப்பியுள்ளார்.
இந்த மனு பரிசீலிக்கப்படாததை அடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2020ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், சம்பள பாக்கி வழங்கப்படாததால், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவியின் மருத்துவ செலவுகளையும், இரு குழந்தைகளின் படிப்பு செலவுகளையும் மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகால பணியில் தனது நேர்மை காரணமாக 39 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு, நீதிபதி பட்டு தேவானந்த், காவல் ஆய்வாளரின் கோரிக்கை மனுவை, காவல் துறை தலைவரான டி.ஜி.பி. பரிசீலிக்காததில் இருந்து மனுதாரர் எந்தளவுக்கு துன்புறுத்தப்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது எனவும், நாட்டில் அதிகாரிகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த வழக்கு மிகச்சிறந்த உதாரணம் எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஊதியத்தை மட்டுமே நம்பியுள்ள மனுதாரரின் சம்பள பாக்கியை வழங்காததும், சம்பள பாக்கியை கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்காத டி.ஜி.பி.யின் செயல் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனக் கூறி, ஒரு வாரத்தில் மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.