அரசு வழக்கறிஞர்களுக்கு கட்டணம் வழங்க சிறப்பு அலுவலர்; உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரசு வழக்கறிஞர்களுக்கு கட்டணம் வழங்க சிறப்பு அலுவலர்; உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண கோரிக்கைகளை பெற்று, முடிவெடுக்கும் வகையில் சிறப்பு அதிகாரியை நியமித்து, அரசாணை வெளியிட வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய எஸ்.ராமசாமி, அரசுக்காக ஆஜராகி வாதிட்ட வழக்குகளுக்கான கட்டணத்தின் பாக்கி தொகை ஒரு கோடியே 95 லட்சத்து ஓராயிரத்து 622 ரூபாயை வழங்க உத்தரவிடக் கோரி 2011ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி 2 வாரங்களில் பாக்கி கட்டணத்தை தர வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து 2012ஆம் ஆண்டு தலைமை செயலாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ராமசாமிக்கு வழங்கப்படவேண்டிய வழக்கறிஞர் கட்டணம் கொடுக்கப்பட்டுவிட்டதாக அறிக்கை தாக்கல் செய்தார்.

மேலும், இதுபோன்ற வழக்குகள் தொடர்ந்து வருவது குறித்து தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், 11 சதவீத தொகை மட்டுமே கொடுக்கப்பட்டு வருவதால், குறிப்பிட்ட ஒரு துறையை நியமித்து, வழக்கறிஞர் கட்டண கோரிக்கைகளை பெற்று, ஆய்வு செய்து, கோரிக்கையை நடைமுறைபடுத்த வேண்டும் என்றும், 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டண பாக்கி குறித்த அறிக்கையை தயார் செய்து, சம்பந்தப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கு அனுப்பவேண்டுமென கடிதத்தில் வலியுறுத்தி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. 

இந்த கடிதத்தின் முக்கியத்துவத்தை ஏற்ற நீதிபதிகள், சில விதிகளை வகுத்து உத்தரவிட்டனர். அதன்படி அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண நடைமுறைகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அவ்வாறு நியமிக்கப்படும் அதிகாரி, அரசிற்காக ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டிய கட்டணத்துக்கான கோரிக்கைகளை பரிசீலித்து, வழக்கறிஞர் கட்டணங்களை வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

சிறப்பு அதிகாரி பரிசீலித்து முடித்த 30 நாட்களுக்குள் தொகையை வழங்க வேண்டும் எனவும், சிறப்பு அதிகாரிக்கு உதவியாக போதுமான ஊழியர்களை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

சிறப்பு அதிகாரி நியமனம் தொடர்பாக அரசாண வெளியிட வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ்பாபு ஆகியோர், அதுகுறித்த அறிக்கையை ஆகஸ்ட் 28 அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com