கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை உயர்த்திய வண்ணம் உள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த 7 ஆம் தேதி வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு ஆயிரம் ரூபாயை கடந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஆயிரத்து 8 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களின் விலை-யும் 8 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை 2 ஆயிரத்து 507 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலை அதிகரித்து வருவது நடுத்தர மக்களை கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளதால் உணவுப்பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு உள்ளது.