விரைவில் வருகிறது அறிவிப்பு... 100 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும்..?

100 சதவீத ஆசிரியர்கள் வருகைக்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ள நிலையில், அதற்கான அறிவிப்பை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

விரைவில் வருகிறது அறிவிப்பு... 100 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும்..?
தமிழகத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இந்தாண்டும் 2வது அலையாக தொற்று பரவியதால் இன்னும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து அரசு முடிவு எடுக்கவில்லை. இருப்பினும் தொற்றின் பாதிப்பு குறையத் தொடங்கியதையடுத்து தமிழகத்தில் படிப்படியாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக கடந்த வாரம் முதலமைச்சர் அறிவிப்பின்படி, பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு சுழற்சி முறையில் வந்து தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகளில்  ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து 19ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். தற்போது 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் 100 சதவீதம் பள்ளிக்கு வரவழைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
 
இந்த வகுப்பு ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து ஆன்லைன் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ள பள்ளிக்கல்வித்துறை, அனைத்து ஆசிரியர்களும் பாடக்குறிப்பேடு, செயல்திட்ட குறிப்பேடு, தினமும் எழுதி அதை தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 
 
அவர்களை முழுமையாக பள்ளிக்கு வரவழைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளார்.