9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கான தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு விவேகானந்தனும், வேலூர் மாவட்டத்திற்கு விஜயராஜ் குமாரும், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மதுமதியும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அமுதவல்லியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் பார்வையாளராக சம்பத்தும், விழுப்புரம் மாவட்ட தேர்தல் பார்வையாளராக பழனிசாமி ஐ.ஏ. எஸும், நெல்லை மாவட்டத்திற்கு ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸும், தென்காசி மாவட்டத்திற்கு சங்கர் ஐ.ஏ.எஸும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு காமராஜ் ஐ.ஏ.எஸ் ஆகியோரையும் தமிழக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தேர்தல் பார்வையாளர்கள் அனைவரும் செப்டம்பர் 22ம் தேதி அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று பணியை தொடங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அவர்களின் அலைபேசி எண்கள் மற்றும் பிற விவரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் வாயிலாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.