உண்மையை வெளிக்கொண்டு வந்த அமைப்பு
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சென்னை ஐஐடியில் எந்த சமூகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் அதிகளவில் பணிபுரிகிறார்களென இளையதலைமுறை என்ற அமைப்பு விண்ணப்பித்து இருந்தது. இதனை தொடர்ந்து இந்த கடிதத்துக்கு கிடைத்த பதிலை அந்த அமைப்பு நேற்று வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
514 உயர்சாதி பேராசிரியர்கள்
ஐஐடி சென்னையில் மொத்தம் 619 பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் 514 பேர் உயர்சாதியினராக இருந்து வருகிறார்கள். அதாவது சென்னை ஐஐடியில் பணிபுரியும் பேராசிரியர்களில் 83 சதவீதத்தினர் உயர்சாதியை சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்கின்றனர். இதில், 70 பேர் (11.30%) மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இளையதலைமுறை விமர்சனம்
பட்டியலினத்தை பொறுத்தவரை 619 பேராசிரியர்களில் 27 பேர், அதாவது 4.30 சதவீதம் மட்டுமே உள்ளனர். அதேபோல் பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்த 8 பேர் மட்டுமே சென்னை ஐஐடியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களின் சதவீதம் வெறும் 1.30% மட்டுமேயாகும். இதனை சுட்டிக்காட்டி இளையதலைமுறை அமைப்பு விமர்சித்து இருக்கிறது.
இடஒதுக்கீட்டிற்கு நேர்ந்த அநீதி
இடஒதுக்கீடை மீறி உயர்சாதியினருக்கு மட்டுமே இந்த நிறுவனங்களில் பேராசிரியர் உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டு வருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன, இருப்பினும் மத்திய அரசோ, ஐஐடி நிர்வாகமோ இது குறித்து எந்த பதிலும் அளிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.