ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் போராட்டம் வடிவம் மாறும் - கி.வீரமணி எச்சரிக்கை

ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்ட நேரிடும் என திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தமிழ்நாடு ஆளுநருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் போராட்டம் வடிவம் மாறும் - கி.வீரமணி எச்சரிக்கை

ஆளுநருக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டு தடை அவசர சட்ட மசோதாவிற்கு இன்னும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளிக்காததை கண்டித்து திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அது மட்டும் இல்லாமல் மதிமுகவை சேர்ந்த நிர்வாகிகளும், மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆளுநருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

ஆன்லைன் மரணங்களுக்கு ஆளுநர் தான் பொறுப்பு

ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திராவிட கழக தலைவர் கி.வீரமணி, அவசர சட்டமாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி சூதாட்ட மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் தராமல் இருப்பதால் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை கிட்டத்தட்ட 32 நபர்கள் இறந்துள்ளனர். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் இறப்பவர்களுக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும்.

நேரம் ஒதுக்காத ஆர்.என் ரவி

அண்ணாமலைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், நேரம் ஒதுக்க தெரிந்த ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை சந்திக்க நேரம் ஒதுக்காதது ஏன்? திராவிட கழகம் சார்பில் போராட்டங்களை அறிவித்ததற்கு பிறகு தான் ஆளுநர் மாளிகையின் கதவு கொஞ்சம் திறந்திருக்கிறது. திமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றி விடக்கூடாது, என்பதற்காக ஆளுநர் இப்படி செயல்பட்டு  வருகிறார்.

உயிர்களை காப்பாற்ற கையெழுத்திடுங்கள்

அவர் ஆளுநராக இல்லாமல் அரசியல்வாதி போல சனாதான கொள்கைகளை பற்றி பேசி வருகிறார். அவர் இந்த சட்டத்திற்கு நந்தி போல குறுக்கே படுத்து இருக்கிறார். திமுகவுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்பதற்காக இது போன்று செய்து வருகிறார். திமுகவிற்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காக சட்ட மசோதாவில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும்.

மேலும் படிக்க: தமிழ்நாடு முழுவதும் 100 திமுக பொதுக்கூட்டங்கள்..! எங்கு? எதற்காக?

ஆர்.எஸ்.எஸ்-காரர் போலப் பேசும் ஆளுநர்

சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இன்னும் 20 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்-காரர் போலப் பேசிக்கொண்டு, தேவை இல்லாமல் திராவிட சித்தாந்தங்களை ஆராய்ச்சி செய்து கொண்டு தன் கடமைகளில் இருந்து தவறுகிறார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் போராட்டம் வடிவம் மாறும்.

ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்ட நேரிடும், தமிழ்நாடு அமைதியாக இருக்கும் சூழலில் அமலியை ஏற்படுத்த நினைக்கிறார்கள், நாங்கள் வன்முறையில் ஈடுபட மாட்டோம், எங்களது போராட்டம் அடுத்த கட்டமாகவும் தொடரும் என கி.வீரமணி தெரிவித்தார்.