பருத்தி- நூல் விலையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை.. மத்திய அமைச்சர் பியூஷ்கோயலிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கும்படி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ்கோயலிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பருத்தி- நூல் விலையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை.. மத்திய அமைச்சர் பியூஷ்கோயலிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பருத்தி மற்றும் நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளி தொழில் கடுமையான இடையூறுகளை சந்திப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பருத்தி மற்றும்  நூல் விலையை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க கோரியும், தமிழக நெசாவளர்கள், ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் நிலையினை குறிப்பிட்டும் கடந்த ஜனவரி மாதம் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து கடந்த 16ம் தேதியும் ஜவுளித்தொழிலில் நிலவும் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியதாகவும், தி.மு. க எம்.பி கனிமொழி தலைமையிலான குழு நேற்று மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று மீண்டும் அமைச்சர் பியூஷ் கோயலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.