குறுவை சாகுபடி பாதிப்பு; முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

குறுவை சாகுபடி பாதிப்பு; முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி குறுவை சாகுபடிக்காக ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கான ஆய்வு மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கபட்டாலும் போதுமான தண்ணீர் வரத்தின்றி விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

போதிய நீர் கடைமடை வரை சென்றடையாததால் குறுவை சாகுபடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வரும் நிலையில், டெல்டா மாவட்டங்களில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மறு விவசாயம் செய்யவும் சம்பா சாகுபடிக்கு தயாராகும் வகையில் சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும் என்றும், உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தண்ணீரின்றி குறுவை சாகுபடிக்கு ஏற்பட்டுள்ள பயிர் சேத ஆய்வு மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் தமிழக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் ஆய்வுகளை தீவிரப்படுத்துவது குறித்தும், ஏக்கருக்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகை குறித்தும் முக்கிய முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர், வேளாண்மைத்துறை செயலாளர், வேளாண்மைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

இதையும் படிக்க:பொன்முடி சொத்து குவிப்பு வழக்கு; இன்று விசாரணை!