கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம் முன்பு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம் முன்பு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடி பகுதியைச் சேர்ந்த மாரம்மாள் என்ற பெண் கணவனை இழந்த நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக தனது இரண்டு குழந்தைகளுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓசூர், அந்திவாடி பகுதியில் வசித்து மாரம்மாளுக்கு எஸ்வந்த் (13) மற்றும் லிசியா (8) இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுநராக இருந்த கணவனை இழந்த நிலையில் கூலி வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இவரது கணவருக்கு சொந்தமாக ஓசூர் மத்திகிரி பகுதியில் 20 சென்ட் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.

தனது குடும்ப வறுமை காரணமாக தனக்கு உரிய இந்த நிலத்தை,  தரும்படி மாரம்மாள் அவரது மாமனார் உள்ளிட்ட உறவினர்களிடம் பலமுறை கேட்டுப் பார்த்தும் அதனை தர மறுப்பதாகவும் இவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த மாரம்மாள் தனது இரண்டு குழந்தைகளுடன், மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறும் நாளான இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் முன்பு மூன்று பேரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

இதனை கண்ட அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக அவர்களை மீட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானப்படுத்தினர். மேலும் இவர்களது குடும்ப பிரச்சனை தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
குடும்ப பிரச்சினை காரணமாக தனது இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரகம் முன்பு பெண் தீக்குளிக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.