மாலைமுரசு செய்தி எதிரொலியாக பழங்குடியினர் காலனியில் ஆய்வு நடத்திய துணை மேயர்...அடிப்படை தேவைகள் விரைவில் செய்து தரப்படும் என உறுதி..!

மாலைமுரசு செய்தி எதிரொலியாக பழங்குடியினர் காலனியில்  ஆய்வு நடத்திய துணை மேயர்...அடிப்படை தேவைகள் விரைவில் செய்து தரப்படும் என உறுதி..!

மாலைமுரசு செய்தி எதிரொலியாக, சென்னை கோட்டூர்புரத்தில் ஆய்வு மேற்கொண்ட சென்னை மாநகர துணை மேயர் மகேஷ் குமார், பழங்குடியினருக்கு தேவையான அடிப்படை வசதிகள் விரைவில் செய்து தரப்படும் என உறுதி அளித்தார்.

பழங்குடியின மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து செய்தி வெளியிட்ட மாலைமுரசு தொலைக்காட்சி:

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கோட்டூர்புரம் 170வது வார்டில் உள்ள நரிக்குறவர் காலனியில், பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நீண்டகாலமாக அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த செய்தி நமது மாலை முரசு தொலைக்காட்சியில் செய்தித்தொகுப்பு ஒளிப்பரப்பானது.  

மாலைமுரசு செய்தி எதிரொலியாக ஆய்வு மேற்க்கொண்ட சென்னை மாநகராட்சி துணை மேயர் :

இதன் எதிரொலியாக, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், கவுன்சிலர் கதிர் முருகன் மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள், கோட்டூர்புரத்தில் உள்ள நரிக்குறவர் காலணியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதி மக்கள் தங்களது கோரிக்கைகளை துணை மேயரிடம் தெரிவித்தனர்.

அடிப்படை வசதிகள் விரைவில் செய்து தரப்படும் என உறுதி அளித்த துணை மேயர்:

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை மேயர் மகேஷ்குமார், நரிக்குறவர்களை பழங்குடியின பட்டியல் இனத்திற்கு மாற்ற கோரி, பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பழங்குடியின மக்களுக்கு தேவையான மின் இணைப்பு, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள், விரைவில் செய்து தரப்படும் என உறுதி அளித்தார். மேலும், இங்குள்ள சிறுவர்கள் பள்ளிகளுக்குச் சென்று படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.