தடை செய்யப்பட்ட நாட்டிற்கு சென்று வந்த இந்தியர் கைது!
சென்னை: இந்திய அரசு தடை செய்த நாட்டிற்கு சென்று வந்த நபரை, சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணா பன்னாட்டு முனையத்தில் இருந்து அபுதாபி செல்லவிருந்த விமானத்தில் பயணம் செய்ய வந்தவர்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்பொழுது, பீகார் மாநிலத்தை சேர்ந்த விகாஷ் குமார் (34) என்பவரது பாஸ் போர்ட்டை ஆய்வு செய்தனர். அப்போது, அபுதாபியில் கப்பல் நிறுவனத்திற்கு வேலைக்காக செல்வதாக கூறியுள்ளார். அவரது, பாஸ்போர்ட்டை ஆய்வு செய்ததில், கடந்த நவம்பர் மாதம், ஏமன் நாட்டிற்கு சென்று நான்கரை மாதம் தங்கி இருந்து, கடந்த மாதம் இந்தியா திரும்பியுள்ளார், என்பது தெரியவந்துள்ளது.
2017ல், இந்திய அரசு, இந்தியர்கள் ஏமன் நாட்டிற்கு செல்லக்கூடாது என தடைவிதித்தது. அந்நாடு முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் நிறைந்து இருப்பதால், அங்கு செல்வதற்கு இந்திய அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் சென்று வந்திருப்பது தெரிய வந்ததால், அவரது விமான பயணத்தை ரத்து செய்தனர், குடியுரிமை அதிகாரிகள். விசாரணையில், ஏமன் நெற்றிக்கு செல்லக்கூடாது என்பது தனக்கு தெரியாது எனவும், தான் வேலை பார்க்கும் நிறுவனம், தன்னை ஒரு வேலைக்காக அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர், விகாஷ் குமாரை, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர், விமான நிலைய போலீசார்.