வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடித்திட கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவு...
தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடித்திட, கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள அவர், பிரிட்டனில் புதிய வகை உருமாறிய கொரனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது நோய் பாதிப்புகள் குறைவாக கண்டறியப்பட்டு வந்தாலும் மீண்டும் நோய் பரவல் அதிகரிக்காத வகையில் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக 61 லட்சம் பேர் 2வது தவணை ஊசியை குறித்த காலத்திற்குள் செலுத்துவதை மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மக்கள் கூடும் இடங்களில் அரசின் நிலையான வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்படுகிறது என்பதை மாவட்ட நிர்வாகங்கள் கண்காணித்து உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
ஆவடி, சென்னை, சேலம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார். அடுத்து வரக்கூடிய 2 மாதங்கள் சுகாதாரத்துறைக்கு சவாலான மாதங்களாகும் என்பதால், மாவட்ட நிர்வாகங்கள் நோய்த்தடுப்பு மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும் கேட்டுக்கொண்டுள்ளார்.