பொது விநியோகத் திட்டத்திற்காக பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு இடைக்கால தடை...
பொது விநியோகத் திட்டத்திற்காக பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி 20 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பு கொள்முதல் மற்றும் 80 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான டென்டரில் முந்தைய நிபந்தனைகளை பின்பற்றாமல் புதிய நிபந்தனைகள் வெளியிடப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்..
டெண்டர் அறிவிப்பானையில் உள்ள விதிமுறைகளை பின்பற்றாமல் அவசர அவசரமாக 6 நாட்களுக்குள் முடிக்கப்பட்ட இந்த டென்டருக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.மேலும் பாமாயிலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து முந்தைய நிபந்தனைகளின் படி புதிய அறிவிப்பு வெளியிட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி வேலுமணி மற்றும் தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கொரோனா தொற்று காலத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக அவசரகால டெண்டர் விடப்பட்டதாகவும் இதற்கு தடை விதிக்க கூடாது எனவும் வாதிட்டார்..
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதுவரை தமிழக அரசின் பருப்பு கொள்முதல் டென்டருக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்..