திருவண்ணாமலை அருகே கருணாநிதி சிலை வைக்க இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அமைக்கும் பணிகளுக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை அருகே கருணாநிதி சிலை வைக்க இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணமலையில் கிரிவல பாதை மற்றும் மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92 புள்ளி 5 அடி நிலத்தை வாங்கி, அருகில் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து சிலை அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் கிரிவல பாதையில் சிலை அமைப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவர் எனவும், அப்பகுதியில் கால்வாய் அமைந்துள்ளதால், அங்கு கட்டுமானம் மேற்கொண்டால் நீர் வழிப்பாதை பாதிக்கப்படும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தும், வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்தும் அறிக்கை தாக்கல் செய்ய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. அதுவரை சிலை அமைக்கும் விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்கவும் உத்தரவிட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் மாவட்ட ஆட்சியரின் இந்த மனு குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஆதாரங்களை சேகரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். அதுவரை, குறிப்பிட்ட நிலத்தில் சிலை அமைக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டனர்.