கடையில் உணவு சரியில்லையா? இனிமே வாட்ஸ் ஆப் -ல் புகார்...!
கடந்த 6 மாதங்களில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 190 சட்ட ரீதியான உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டதில் 23 நிறுவனங்கள் மீது பாதுகாப்பற்ற உணவு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் தரம் பற்றிய புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர்.மா.ஆர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த 27.04.2023 அன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் மதிப்பிற்குரிய திருப்பெரும்புதுார் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் அறிவுறுத்தலின் படி காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் உள்ள உணவகங்களில் மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் மூன்று குழுவாகக் கொண்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 29.04.2023 அன்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் படிக்க | மே 8ம் தேதி புயலா ? இது எந்த மாவட்டத்துக்கு எல்லாம் பொருந்தும்
29.04.2023 அன்று உணவகங்கள் அதிகம் உள்ள காந்தி ரோடு மற்றும் நடுத்தெருவில் உள்ள 41 உணவு நிறுவனங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் 16 உணவங்கள், 2 பேக்கரிகள், 7 பழங்கள் ஜீஸ் கடைகள், 12 சில்லறை விற்பனை கடைகள், 4 பெட்டி கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வில் 31 கிலோ அழுகிய பழங்கள், 2 கிலோ கெட்டுப்போன இறைச்சி, 10 பெட்டிகள் செயற்கை நிறமிகள் கைப்பற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டன. இவ்வாய்வில் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை பின்பற்றாத 17 உணவு நிறுவனங்களுக்கு (Notice) அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. 3 உணவு நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், பைகள், பயன்படுத்தியதால் தலா ரூ.2000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 190 சட்ட ரீதியான உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டதில் 23 நிறுவனங்கள் மீது பாதுகாப்பற்ற உணவு விற்பனை செய்த வகையில் (Judicial Magistrate) நீதி மன்றங்களில் கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. 40 உணவு நிறுவனங்கள் மீது தரம் குறைவாக மற்றும் தப்புக்குறியிடப்பட்டது என்ற வகையில் மாவட்ட வருவாய் அலுவலர் முன்பு சிவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. தொடரப்பட்ட 40 சிவில் வழக்குகளின் விசாரணை முடிந்து மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் ரூ.5,04,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.