ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு... மலைஏறும் வாலிபர்கள் ஆற்றில் விழுந்த பரிதாபம்...
ஆத்தூர் அருகே உள்ள ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்டவர்கள் மலை ஏறும் போது இரண்டு வாலிபர்கள் ஆற்றில் தவறி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன் மலை தொடர்ச்சியில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது. இதை வனத்துறையினர் சுற்றுலா தலமாக பராமரித்து வருகின்றனர். படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வசதி, வனப்பகுதியில் பொழுது போக்கும் வகையில் குடில், பூங்கா, மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் ஆத்தூர் மட்டுமின்றி பெரம்பலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆணைவாரி நீர் வீழ்ச்சிக்கு வருகை தந்துள்ளனர். அப்போது கல்வராயன் மலை தொடர்ச்சி பகுதியில் பெய்து வரும் தொடர் மழைக் காரணமாக ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அப்போது நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்த ஒரு பெண் உள்பட 5 பேர் சிக்கி கொண்டுள்ளனர். அவர்கள் அங்கிருந்து தப்பிக்க நீர்வீழ்ச்சியின் இடது புறமாக உள்ள பாறை மீது ஏறியுள்ளனர். அப்போது பாறை வழுக்கு இரண்டு வாலிபர்கள் ஆற்றில் தவறி விழுந்துள்ளனர். பினனர் அந்த இரண்டு வாலிபர்களும் நீச்சலடித்து கரை சேர்ந்து உயிர் பிழைத்துள்ளனர்.
இதை நீர்வீழ்ச்சிக்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனையடுத்து ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.