மாநில அரசுகளுக்கு தடுப்பூசிகளை நேரடியாக வழங்க இயலாது!

கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்த புள்ளியை தமிழ்நாடு அரசு கோரிய நிலையில் எந்த நிறுவனமும் ஒப்பந்தப்புள்ளி அளிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

மாநில அரசுகளுக்கு தடுப்பூசிகளை நேரடியாக வழங்க இயலாது!

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு போதிய அளவிலான மருந்துகள் இல்லாததால் உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் மூலமாக தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மே  உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் தடுப்பூசி கொள்முதலுக்கு  தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் ஒப்பந்த புள்ளி கோரியது அதில்  90 நாள்களில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்க தயாராக உள்ள நிறுவனங்கள் ஜூன் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே பல்வேறு மாநிலங்கள் மற்ற நாடுகளிலிருந்து தடுப்பூசியை கொள்முதல் செய்திட முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் பைசர் , மாடர்னா உள்ளிட்ட முன்னணி தடுப்பூசி நிறுவனங்கள் நேரடியாக மாநில அரசுகளுக்கு தடுப்பூசிகளை வழங்க இயலாது என தெரிவித்து விட்டனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிக்கான காலக்கெடு நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் எந்த ஒரு முக்கிய நிறுவனமும் தடுப்பூசி வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளியை அளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக உள்நாட்டு உற்பத்தியாளர்களான பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனம் ஆகியவை ஒப்பந்தத்தில் பங்கெடுக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்கள் மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசிகள் கொள்முதல் செய்திட மட்டுமே தற்போதைய சூழலில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசின் சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்  தமிழகத்திற்கு ஜூன் 15 முதல் 30க்குள் 18.36 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் எனவும் மேலும்  தமிழக அரசின் தடுப்பூசி நேரடி கொள்முதல் அடிப்படையில் 16.83 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நிலவும் தடுப்பூசிகான தட்டுப்பாட்டைப் போக்க ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் மாநில அரசே நேரடியாக தடுப்பூசியை உற்பத்தி செய்திட வலியுறுத்தி வருகிறது. 

அதன்படி  பாரத் பயோடெக் நிறுவனத்தின் சார்பில் அதிகாரிகள் செங்கல்பட்டில் அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என ஆய்வு செய்து வருகின்றனர்.