வித்தியாசமான அரசியலை சட்டப்பேரவையில் தான் காண்பிக்க வேண்டும்... தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி...

பல்கலைக்கழகங்கள் இணைக்கும் முடிவை கைவிட்டு, தமிழகத்தில் வித்தியாசமான அரசியலை சட்டப்பேரவையில் தான் காண்பிக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

வித்தியாசமான அரசியலை சட்டப்பேரவையில் தான் காண்பிக்க வேண்டும்... தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி...

தூத்துக்குடி : நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் வந்திறங்கினார்.  தொடர்ந்து அவர் சாலை வழியாக தென்காசி மாவட்டத்தில் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றார். 

முன்னதாக விமான நிலையத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவலில் பூலித்தேவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்காக வந்துள்ளேன். தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளேன். கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கூட விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

எனவே தமிழக அரசு மக்களுடைய பழக்கங்களையும், உணர்வுகளை மதிக்கக்கூடிய வகையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்க வேண்டும். அதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். 

தமிழகத்தில் அதிமுக-பாஜக இரண்டு கட்சிகளும் தமிழகத்தின் நலனுக்கான விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. வரும் உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். 

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடம் புனரமைக்கப்பட்டதன் மூலம் தியாகிகள் வரலாறு சிதைக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர்‌ ராகுல்காந்தி மட்டுமே குற்றம்சாட்டியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கக்கூடிய அம்ரீந்தர் சிங்,  ஜாலியன் வாலாபாக் நினைவிடம் புனரைமைக்கபட்டதை "அழகு" என்று குறிப்பிட்டு வரவேற்றுள்ளார். எனவே, கட்சிக்குள்ளேயே முரண் கருத்துக்கள் உள்ளது. பிரதமர் மோடி, தலைமையிலான அரசு, தியாகிகள் நினைவிடத்தை செம்மைப் படுத்தியுள்ளது என்பதை மறுக்கமுடியாது.

1958 முதல் தமிழகத்தில் ஒவ்வொரு முறை ஆட்சி மாறும் போதும் முந்தைய முதலமைச்சரின் பெயரில் ஒருவர் செய்ததை மற்றொருவர் எடுப்பதும், மாற்றுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த நடைமுறையை இந்த அரசாவது கைவிட வேண்டும். அதன்படி பல்கலைக்கழகங்கள் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பதையே பாஜக கட்சி சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரனும் நேற்று சட்டமன்றத்தில் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் வித்தியாசமான அரசியலை காட்டப்போகிறோம் என திமுகவினர் சொன்னார்கள். அவர்கள், வித்தியாசமான அரசியலை சட்டப்பேரவையில் தான் காண்பிக்க வேண்டும். பல்கலைக்கழகங்களை அதன் பெயரிலேயே செயல்பட அனுமதிக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பதையே பாஜக வலியுறுத்துகிறது. தமிழக அரசு இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கும் என நம்புகிறோம் என்றார்.