வனத்துறைக்கு ஆட்டம் காட்டும் ஆட்கொல்லி புலி இன்றாவது சிக்குமா?
நீலகிரியில் தொடர்ந்து 19ஆவது நாளாக தேடப்பட்டு வரும் ஆட்கொல்லி புலியின் நடமாட்டம், நம்பிகுன்னு வனப்பகுதியில் உள்ள தானியங்கி கேமராவில் பதிவானதை தொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா வனப்பகுதியில் பதுங்கிய ஆட்கொல்லி புலியை தேடும் பணியில் வனத்துறையினர், கால்நடை மருத்துவத் துறையினர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.,
புலியின் நடமாட்டம் குறித்து, போஸ்பரா, நம்பிகுன்னு, மண்வயல் மற்றும் கார்குடி ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த தானியங்கி கேமராக்களில் ஆய்வு செய்த போது, ஆட்கொல்லி புலி போஸ்பரா வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து, நம்பிகுன்னு வனப்பகுதியில் நடமாடி வருவது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வன கால்நடை மருத்துவர்கள் புலி நடமாடும் வனப்பகுதிக்கு விரைந்தனர். இதனால் போஸ்பரா மற்றும் நம்பிகுன்னு பொதுமக்கள் வனப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.