நிலத்தை அளக்க 10 ஆயிரம் லஞ்சம்... காஞ்சிபுரத்தில்  நில அளவையர் கைது...

காஞ்சிபுரம் அருகே நிலத்தை அளந்து கொடுக்க 10 ஆயிரம்  ரூபாய் லஞ்சம்  வாங்கிய நில அளவையர், அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிலத்தை அளக்க 10 ஆயிரம் லஞ்சம்... காஞ்சிபுரத்தில்  நில அளவையர் கைது...

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா களக்காட்டூர் அடுத்த வேடல் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் மாவட்ட பாஜக விவசாய அணி தலைவராக உள்ளார்.  சரவணன் தனது புஞ்சை நிலத்தை, நில அளவை செய்யக் கோரி வாலாஜாபாத் தாலுக்கா அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் கடந்த 2019 செப்டம்பர் மாதம் விண்ணப்பித்திருந்தார்.

கடந்த ஒரு வருட மேலாக கொரோனா பரவல்  காரணமாக நில அளவை தடை  ஏற்பட்டுள்ளது. சரவணன் பலமுறை வாலாஜாபாத் தாலுக்கா அலுவலகத்திற்கு சென்று நில அளவையர் இந்துமதியை சந்தித்து இது குறித்து கேட்டுள்ளார். இந்துமதி பல்வேறு காரணங்களை கூறி தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சரவணன் தனது நண்பர் மூலம் இந்துமதியிடம் பேசியபோது ரூபாய் 20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.  இது குறித்து  காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சரவணன் புகார் தெரிவித்தார்.  அதைத்தொடர்ந்து நேற்று இந்துமதியை சந்தித்து அவரின் உதவியாளர் சுதனிடம்  பத்தாயிரம் ரூபாய் அளித்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து  இருவரையும் கைது செய்தனர்.