தாமதமாக அறிவிக்கப்படும் பள்ளி விடுமுறை... மழையால் பாதிக்கும் பள்ளி மாணவர்கள்...

திருப்பத்தூரில் பள்ளி விடுமுறையை தாமதமாக அறிவிப்பதால் மாணவ, மாணவிகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றார்கள்.

தாமதமாக அறிவிக்கப்படும் பள்ளி விடுமுறை... மழையால் பாதிக்கும் பள்ளி மாணவர்கள்...

திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையை தொடர்ந்து தாமதமாகவே அறிவித்து வருகிறார் மாவட்ட ஆட்சியர். இதனால் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும் மிகுந்த துயரத்திற்கு உள்ளாகின்றனர். சில தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தொலைவிலுள்ள பள்ளிக்கு செல்ல காலை 7 மணிக்கே வீட்டிலிருந்து புறப்படும் சூழ்நிலையில்  திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தாமதமாக சுமார் 8 மணி அளவிலே விடுமுறை அறிவிப்பதால் அனைத்து தரப்பினரும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மழை நனைந்து கொண்டே வீடு திரும்புகின்றனர். மேலும் தொலைவில் உள்ள மாணவர்கள் பேருந்திற்காக மழையில் நனைந்து கொண்டு நின்று கொண்டிருக்கிறார்கள். இதனால் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களும் பெற்றோர்களும் மாவட்ட ஆட்சியர் முன்கூட்டியே விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றனர்.