ஓ.பி.எஸ் அணி ஏற்றிய அதிமுக கொடி இறக்கம்..!

ஓ.பி.எஸ் அணி ஏற்றிய அதிமுக கொடி இறக்கம்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஓ.பி.எஸ் அணியினர் ஏற்றிய அதிமுக கொடியை வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் இறக்கியதால் பரபரப்பு நிலவியது. 

மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக  பணிமனை அருகே பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சுப்ரீம் இளங்கோ தலைமையிலான குழுவினர் அவரது படத்திற்கு மலர் மாலை சூட்டியதோடு அங்கிருந்த கொடி கம்பத்தில் அதிமுக கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினர்.

இதனையறிந்த இபிஎஸ் ஆதரவாளர்களான அதிமுகவின் கோவை வடக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி அருண்குமார், கோவை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர் உள்ளிட்ட அதிமுகவினர், அங்கே கொடியேற்றி விட்டு நின்று கொண்டிருந்த  ஓபிஎஸ் அணியினரிடம்,  ‘நீங்கள் அதிமுக கொடியை ஏற்ற எந்த உரிமையுமில்லை’ என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு  அவர்கள் ஏற்றிய  கொடியினை இறக்கினர்.

இதனையறிந்து வந்த மேட்டுப்பாளையம் காவல்துறை அதிகாரிகள் இரு தரப்பையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், ”ஓபிஎஸ் தரப்பினர் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது குறித்து எங்களுக்கு ஆட்சேபனையில்லை; ஆனால் சட்டத்திற்கு விரோதமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கொடியை ஏற்றுவதையோ அதனை பயன்படுத்துவதையோ அனுமதிக்க இயலாது”,   என காவல்துறையினரிடம் தெரிவித்த அதிமுகவினர்,  ஓபிஎஸ் தரப்பில் ஏற்றிய கொடியை இறக்கியதோடு அதனை தாங்களே எடுத்தும் சென்று விட்டனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் நெடுஞ்சாலையோரத்தில் அதிமுக கொடியை ஒரு தரப்பினர் ஏற்றி மற்றொரு தரப்பினர்  இறக்கியதாக காவல்துறையினர் முன்பு வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட சன்பவம்  அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழலை உருவாக்கியது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com