தமிழகம் முழுவதும் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

சுகாதாரத் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறவுள்ளது. இதில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

சுகாதாரத் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறவுள்ளது. இதில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்குகிறது. கொரோனா மூன்றாவது அலை எச்சரிக்கை இருப்பதாலும், கேரளாவில் தினசரி தொற்று அதிகரித்துள்ளதாலும், தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, தமிழகம் முழுவதும் கடந்த 12-ம் தேதி 40 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. குறிப்பாக, கேரளா எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூா், நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அதிகமான முகாம்கள் அமைக்கப்பட்டன. அன்றைய தினம் ஒரேநாளில் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 நபா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அதற்காக, வாரம் ஒருமுறை இதுபோன்ற சிறப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 20 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் இன்று நடைபெறவுள்ளன. 17 லட்சம் எண்ணிக்கையிலான கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. குறைந்தது 15 லட்சம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.