திங்கள் முதல் வியாழன் வரை இலை... வெள்ளி, சனி, ஞாயிறு பொட்டலம்... அன்னதான திட்டத்தில் மாற்றம்... 

கோயில்களில் இன்று முதல் மீண்டும் பந்தியிட்டு இலையில் அன்னதானம்

திங்கள் முதல் வியாழன் வரை இலை... வெள்ளி, சனி, ஞாயிறு பொட்டலம்... அன்னதான திட்டத்தில் மாற்றம்... 

கோயில்களில் இன்று முதல் மீண்டும் பந்தியிட்டு இலையில் அன்னதானம் வழங்கப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழகம் முழுவதும் 754 கோயில்களில் தரிசனத்துக்கு வருகைதரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 16-ம் தேதி திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் ஆகிய 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்றும், இந்த திட்டம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் சேகர்பாபு, கொரோனா பெருந்தொற்று காரணமாக கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம், பந்தியில் இலையில் பரிமாறப்படாமல் உணவுப்பொட்டலங்களாக அனைத்து நாட்களிலும் வழங்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

இந்த நடைமுறை இன்று முதல் மாற்றப்பட்டுள்ளது என்றும், அதன்படி திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை கோயில்களில் உள்ள அன்னதானக் கூடங்களில் சமூக இடைவெளியுடன் பக்தர்களுக்கு பந்தியிட்டு இலையில் அன்னதானம் பரிமாறப்படும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதானம் உணவுப் பொட்டலங்களாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.