சொத்து குவிப்பு வழக்கு: உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி ஆஜராகாத எம்.ஆர்.விஜயபாஸ்கர்...

சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி கால அவகாசம் கேட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் தெரிவித்துள்ளனர். 

சொத்து குவிப்பு வழக்கு: உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி ஆஜராகாத எம்.ஆர்.விஜயபாஸ்கர்...

சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி கால அவகாசம் கேட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் தெரிவித்துள்ளனர். 

அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர் விஜயபாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அவருக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55 சதவீதம் வரை சொத்து சேர்த்தது தெரியவந்தது. மேலும், கணக்கில் காட்டப்படாத 25 லட்ச ரூபாய் பணம் உட்பட பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், விஜயபாஸ்கரிடம் நேரில் விசாரணை நடத்துவதற்காக, சென்னை ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புதுறை அலுவலகத்தில் இன்று ஆஜராக வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளாட்சி தேர்தல் பணிகளைக் காரணம் காட்டி, கால அவகாசம் கேட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஓரிரு முறை விசாரணைக்கு ஆஜராகுமாறு எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வாய் மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும் அவர் ஒத்துழைக்க மறுத்து விட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு விஜயபாஸ்கரை நேரில் விசாரணைக்கு அழைக்க மீண்டும் சம்மன் அனுப்புவது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.