இறந்து போன மகளுக்கான ஜீவனாம்ச பாக்கியைப் பெற அவரது தாயாருக்கு உரிமையுள்ளது - நீதிமன்றம்

இறந்து போன மகளுக்கான  ஜீவனாம்ச பாக்கியைப் பெற அவரது தாயாருக்கு உரிமையுள்ளது - நீதிமன்றம்
Published on
Updated on
1 min read

சரஸ்வதி தாக்கல் செய்த மனு நிலுவை

மதுராந்தகம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை - சரஸ்வதி ஆகியோர் கடந்த 1991ல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தவர்களுக்கு செய்யூர் நீதிமன்றம் 2005ஆம் ஆண்டு விவாகரத்து வழங்கியது. ஜீவனாம்சம் கேட்டு சரஸ்வதி 2014ஆம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த மதுராந்தகம் நீதிமன்றம், மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாயை 2014ம் ஆண்டு முதல் வழங்க வேண்டும் என  2021ல் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் படி  ஜீவனாம்ச பாக்கித் தொகை 6 லட்சத்து 22 ஆயிரத்து 500 ரூபாயை கேட்டு, சரஸ்வதி தாக்கல் செய்த மனு நிலுவையில் இருந்த போது, 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் சரஸ்வதி மரணமடைந்தார்.

இதனால் ஜீவனாம்ச பாக்கியை வழங்க கோரி மகள் சரஸ்வதி தொடர்ந்த வழக்கில் தன்னை இணைக்க கோரி அவரது தாயார் ஜெயா மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்று, வழக்கில் அவரை சேர்த்து மதுராந்தகம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அண்ணாதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி வி.சிவஞானம், இந்து வாரிசுரிமை சட்டம் 15வது பிரிவின்படி, மனைவி இறந்துவிட்டால் அவருடைய சொத்துகள் குழந்தைகளுக்கும், அதன் பிறகு கணவருக்கும், அதற்கும் பிறகே பெற்றோருக்கும் வரும் என கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை பொறுத்தவரை தம்பதிக்கு விவாகரத்து ஆகிவிட்டதால், பாக்கி தொகையை பெற சரஸ்வதியின் தாயாருக்கு உரிமை உள்ளது என கூறி, வழக்கில் ஜெயாவை இணைத்து மதுராந்தம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்ததுடன், அண்ணாதுரையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com