அரசு மருத்துவமனையில் போதை ஆசாமியின் அட்டகாசம்...! போலீசார் விசாரணை ...!
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போதை ஆசாமியின் அட்டகாசம் ...! மருத்துவமனையின் கண்ணாடி உடைப்பு..!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் சென்னை மாநகராட்சியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது தந்தையான சுப்பிரமணிக்கு நீரிழிவு நோய் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து சுப்பிரமணிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மது போதையில் அரசு மருத்துவமனைக்கு வந்த கஜேந்திரன், தனது தந்தையை வீட்டிற்கு அனுப்புமாறு மருத்துவர்களிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தந்தையை அனுப்புவதற்கு, மருத்துவர்கள் மறுப்பு தெரிவிக்கவே, மருத்துவமனை கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளார், கஜேந்திரன்.
இதனை அடுத்து அங்கிருந்தவர்கள், செங்கல்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்த இடத்திற்கு விரைந்த போலீசார், மது போதையில் இருந்த கஜேந்திரனிடம் விசாரணை நடத்தினர். ஆனால் கஜேந்திரன் போலீசார் கூறுவதை கேட்கும் நிலையில் இல்லாததால் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.